ஆற்காடு வட்டம் கலவை அருகே இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ஆம் கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதை வழங்கக் கோரி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் வாழைப்பந்தல் எம்ஜிஆர் சிலை அருகில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு நடத்தி விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்தனர். அதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.