தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.62 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகனச் சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மதியம் வரை நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் ரூ. 2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் கொணவட்டம் அருகே அணுகு சாலையில் நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலர் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் சென்னையைச் சேர்ந் நகை வியாபாரியான ஜிதேந்தர் ரூ. 3.62 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.