தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் ஆதார் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, வேலூரில் முதன்முதலாக பிஎஸ்என்எல் ஆதார் சேவை மையத்தை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் வி.ராஜூ திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:
தமிழகம், புதுச்சேரியில் 239 பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளன. இந்த வாடிக்கையாளர் சேவை மையங்களில் படிப்படியாக ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு இயங்கும். பிஎஸ்என்எல் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் புதிதாக ஆதார் பதிவு, குழந்தைகளுக்கான கட்டாய ஆதார் திருத்தங்கள் ஆகிய சேவைகள் முற்றிலும் இலவசமாக பெறலாம். முகவரி மாற்றம், மற்ற திருத்தங்களும், ஆதார் அட்டை வண்ண பிரிண்ட் ஆகிய சேவைகளும் தனிநபர் அடையாள ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களில் அளிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டு இயங்கும் பிஎஸ்என்எல் ஆதார் சேவை மையங்கள் குறித்த விவரங்களை www.tamilnadu.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்றார்.