மினி லாரி ஓட்டுநரை துரத்திச் சென்று தாக்கிய காவலர் இடைநீக்கம்: எஸ்.பி. உத்தரவு

வேலூரில் வாகனத் தணிக்கையின்போது மினி லாரி ஓட்டுநரை துரத்திச் சென்று தாக்கிய காவலரை இடைநீக்கம்

வேலூரில் வாகனத் தணிக்கையின்போது மினி லாரி ஓட்டுநரை துரத்திச் சென்று தாக்கிய காவலரை இடைநீக்கம் செய்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 
ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். மினி லாரி ஓட்டுநரான இவர், கடந்த 24-ஆம் தேதி இரவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு லாரியை ஓட்டி வந்தார். அப்போது, வேலூர் கோட்டை சுற்றுச்சாலை அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 
போலீஸாரைக் கண்ட பெருமாள், லாரியை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகத் தெரிகிறது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தங்கராஜ், மினி லாரியை துரத்திச் சென்று நேதாஜி மார்க்கெட் அருகே மடக்கிப் பிடித்து ஓட்டுநர் பெருமாளிடம் விசாரணை நடத்தினார். இதில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காவலரின் பெயரைப் பார்க்க அவரது சட்டையில் லாரி ஓட்டுநர் பெருமாள் கை வைத்ததாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த காவலர் தங்கராஜ், ஓட்டுநர் பெருமாளை சரமாரியாகத் தாக்கினார். இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்நிலையில், வாகனத் தணிக்கையின்போது பணியிடத்தில் இல்லாமல் ஓட்டுநரை துரத்திச் சென்று தாக்கிய காவலர் தங்கராஜை இடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். இதேபோல், காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி ஓட்டுநர் பெருமாள் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com