பேர்ணாம்பட்டு அருகே மானை வேட்டையாட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா, வனவர்கள் அரி, வேல்முருகன் ஆகியோர் தலைûயில் வனத் துறையினர் பேர்ணாம்பட்டை அடுத்த அத்திகுப்பம் வனப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் 3 பேர் மான் வேட்டையாட இருந்தது தெரிந்தது. வனத் துறையினரைப் பார்த்ததும் 2 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் பிடிபட்டார்.
விசாரணையில், அவர் கோட்டைச்சேரியைச் சேர்ந்த முரளி (38) என்பதும், தப்பியோடியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராமு (30), வெங்கடேசன் (35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வனத் துறையினர் முரளியை கைது செய்து, அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.