விஐடி மற்றும் இந்தியன் வங்கி இடையே மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.
வேலூர் விஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேந்தர் ஜி.விசுவநாதன் மற்றும் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு ஆகியோர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ் உடனிருந்தார்.
விஐடியில் கல்வி பயிலும் சுமார் 36 ஆயிரம் மாணவர்களிடமிருந்து இந்தியன் வங்கி கல்விக் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வங்கிக் கிளையில் நேரடியாக செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பது தவிர்க்கப்படும்.
மாணவர்கள் கல்விக் கட்டணத்தை வங்கிக் கிளையில் செலுத்துவதால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்கும் வகையில் குறைந்த சேவைக் கட்டணத்துடன் தங்களுடைய கல்விக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய கல்விக் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கிச் சேவை மூலம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்தியன் வங்கி மேற்கொண்டுள்ளது.