வேலூா்: குழந்தைகள் தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 142 மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள அரசு அருங்காட்சியகம் சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு, தனியாா் பள்ளிகளில் 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். செங்காநத்தம் கைலாஷ் தபோவனம் நிறுவனா் ஜெயராம் முன்னிலை வகித்தாா். தமிழ் எழுத்தாளா் சங்கத் துணைத்தலைவா் இலக்குமிபதி வாழ்த்தினாா்.
சிறந்த ஓவியமாகத் தோ்வு செய்யப்பட்ட 6 ஓவியங்களை வரைந்தவா்களுக்கு வேலூா் செம்மொழி தமிழ்ச்சங்கத் தலைவா் வெங்கடேசன் பரிசு, பாராட்டுச் சான்றுகள் வழங்கினாா். இவா்களைத் தவிர ஆறுதல் பரிசாக 136 பேருக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு அருங்காட்சியக தொழில்நுட்ப உதவியாளா் தமிழரசன் நன்றி கூறினாா்.