திருப்பதி அருகே சந்திரகிரியில் கர்நாடக மாநில அரசு சொகுசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம், முல்பாகலைச் சேர்ந்த 8 பேர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற ரொட்டிப் பண்டிகையில் பங்கேற்பதற்காக புதன்கிழமை சென்றனர். விழாவில் பங்கேற்ற பின் நெல்லூரில் இருந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். வியாழக்கிழமை சந்திரகிரியை அடுத்த காசிபண்டா அருகே சென்றபோது பெங்களூருவில் இருந்து திருப்பதி நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக சொகுசுப் பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. அச்சமயம் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த சையத் பாட்ஷா, சல்மான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சந்திரகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.