மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1014 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், 30-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி முகாமைத் தொடங்கி வைத்தார். இதில், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், அம்பத்தூர் பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், வட்டாட்சியர் ஜெயக்குமார், நகர அதிமுக செயலர் கே.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலர்கள் அரக்கோணம் பிரகாஷ், நெமிலி ஏ.ஜி.விஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முகாமில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 2,245 பேர் பங்கேற்றனர். இதில் முதல்கட்டமாக 414 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணைகளை மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, சார்ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 600 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தந்த தொழில் நிறுவனங்கள் மூலம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில், 40 சதவீதத்தனர் பணி ஆணைகளைப் பெற்றனர்.