அரியூரில் வார்டு மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட அரியூர் 58-ஆவது வார்டில் இருந்த இந்திரா நகர், கிருபா நகர், விஸ்வநாத நகர் பகுதிகளை 59-ஆவது வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வார்டு மாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பலமுறை வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அரியூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த பாகாயம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது, வார்டு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளை, மீண்டும் 58-ஆவது வார்டிலேயே நீடிக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.