வேலூரில் ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனரக வாகனங்களுக்கான இரும்பு உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு புணேவில் இருந்து கன்டெய்னர் லாரி சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.15 மணியளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி 30 அடி தூரத்துக்கு தாறுமாறாக ஓடி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் ஓசீம் (40), உதவியாளர் மாருதி (30) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து காரணமாக பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த சத்துவாச்சாரி போலீஸார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து வாகனங்களும் கிரீன் சர்க்கிளில் இருந்து சர்வீஸ் சாலையில் திருப்பிவிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கன்டெய்னர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.