ஏழுமலையானைத் தரிசிக்க, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தன் மனைவியுடன் திருமலைக்கு வந்துள்ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை மதியம் திருப்பதி விமான நிலையத்துக்கு வந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள், சித்தூர் மாவட்ட ஆட்சியர், நகர காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம், திருமலைக்கு சென்ற சிறீசேனா தம்பதியை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின், மாலையில் அவர் தன் மனைவியுடன் திருமலை உச்சியில் உள்ள ஸ்ரீவாரி பாதாலு பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏழுமலையானின் திருவடிகளை வணங்கினார். இரவு திருமலையில் தங்கிய அவர் புதன்கிழமை காலை, சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.
அதையடுத்து, இரவு 8.30 மணியளவில் தனி விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையம் சென்று, அங்கிருந்து இலங்கை செல்ல உள்ளார். இலங்கை அதிபரின் வரவை ஒட்டி, திருமலை, திருப்பதியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.