மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் செலவினங்களுக்காக வேலூர் மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 2.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவை வியாழக்கிழமை நடக்கிறது. இதில், வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகள், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நடத்தும் அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1 முதல் 4 வரை, வாக்கு எண்ணம் மையத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர், வாக்கு எண்ணும் மைய மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள், வாக்குச்சாவடி, வாக்கு எண்ணும் மைய மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள், காசாளர்கள், உதவிக் காசாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பயிற்றுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இதர பிரிவு அலுவலர்கள் என அனைவருக்குமான பயிற்சிப்படி, தேர்தல் பணிக்கான ஊதியம், உணவுப்படி போன்றவை தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் மக்களவைத் தேர்தல் செலவினங்களுக்காக மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு ரூ. 1 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரமும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் பேரவை தொகுதி இடைத் தேர்தலுக்கு என தனியாக ரூ. 28 லட்சத்து 84 ஆயிரத்து 800 என மொத்தம் ரூ. 2 கோடியே 23 லட்சத்து 28 ஆயிரத்து 800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.