திருமலையில் உள்ள வராகர் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷண நிகழ்ச்சிகள் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளன.
திருமலையில் ஸ்ரீவாரி புஷ்கரணி குளக்கரையில் அமைந்துள்ள வராகர் கோயிலில் வரும் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு செவ்வாய்க்கிழமை காலை பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வராக சுவாமிக்கு தற்போது மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இவ்விழா எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டி, 22ஆம் தேதி அங்குரார்ப்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்படும்.
மகாசம்ப்ரோக்ஷணத்திற்கான வைதீக காரியங்கள் 23ஆம் தேதி தொடங்க உள்ளன. 27-ஆம் தேதி காலை 11 மணிமுதல் மதியம் 1.15 மணிக்குள் கோபுரக் கலசங்களுக்கு மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழுக்கு) நடத்தப்படும். மாலை 3 மணிக்கு மேல் பக்தர்கள் வராக சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். இக்கோயிலில் 28-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. இதேபோல், ஏழுமலையானுக்கு வருடாந்திர வசந்தோற்சவம் புதன்கிழமை (ஏப்.17) முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த தினங்களில் வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது என்றார் அவர்.