ஆம்பூரில் தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பாக திருமண மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீல் சனிக்கிழமை தற்காலிகமாக அகற்றப்பட்டது.
ஆம்பூர் தனியார் ஷூ தொழிற்சாலை தொழிலாளர்களிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசினார். அதைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
கூட்டம் நடந்து முடிந்த பிறகு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம், ஆம்பூர் நகரக் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், வட்டாட்சியர் சுஜாதா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத காரணத்தாலும், அந்தக் கூட்டம் நடைபெறுவது குறித்து மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தாலும் ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறையினர் மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். அந்த திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்துவதற்கு ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் திருமண நிகழ்ச்சி தடைபடாமல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென மண்டபம் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. அதன் அடிப்படையில் திருமணம் நடத்துவதற்காக திருமண மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த் துறையினர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தற்காலிகமாக சீலை அகற்றினர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் மண்டபத்துக்கு சீல் வைப்பதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.