குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியில் 11 புதிய கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரம், சிசிடிவி கேமரா ஆகியன திருடு போயின.
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, கே.வி.குப்பம் தொகுதிக்கு உள்பட்ட காந்தி நகரில் உள்ள ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் 29, 30, 32 ஆகிய வார்டுகளுக்கான 3 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சிசிடிவி கேமராவை தேர்தல் அதிகாரிகள் சனிக்கிழமை பொருத்தினர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு வகுப்பறைக் கதவுப் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க வைக்கப்பட்டிருந்த 11 புதிய கணினிகள், சிசிடிவி கேமரா, ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலபதி அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.