வேலூர் மக்களவைத் தேர்தலை எதிர்த்து தர்னாவில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில், தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சில நாள்களுக்கு முன்பு மனு அளித்திருந்தனர். அதில், இந்திய அரசியல் சாசனம் 1949 கோட்பாடு 326, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8 முதல் 11ஏ வரையிலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உள்ள வாக்காளர்கள், பிரிவு 62-இன்படி தகுதிநீக்கம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை சீர்திருத்தம் செய்யவில்லை.
எனவே, இந்த வாக்காளர் பட்டியலை சீர்திருத்தம் செய்து நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தனியார் அமைப்பைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 30 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியுடன் திடீரென தர்னாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தர்னாவில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர்.
ஏற்கெனவே, ராஜபாளையத்தைச் சேர்ந்த வள்ளிநாயகம் உள்பட 52 பேர் வேலூர் மக்களவைத் தேர்தலை நிறுத்தக் கோரி வேலூர் கோட்டை அருகே சனிக்கிழமை முழக்கமிட்டனர்.
இதுதொடர்பாக வட்டாட்சியர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் 52 பேர் மீதும் வேலூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து, சிறிதுநேரத்தில் விடுவித்தனர்.