ஆற்காடு அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு அரசுப் பேருந்து திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. பேருந்தை நெமிலி அருகேயுள்ள மகேந்திரவாடி கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் (40) ஓட்டிச் சென்றார். மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, பின்னால் சென்னையிலிருந்து ஒசூர் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில், பேருந்து நடத்துநர் முனுசாமி (35), பயணிகள் வேலூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த அஜித் (22), சென்னை வடபழனியைச் சேர்ந்த சுந்தர் (40), பெங்களூரைச் சேர்ந்த சரவணன் (44) உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.