வேலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோதண்டபாணி முன்னிலை வகித்தார்.
இதில், வேலூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும், கால்வாயை தூய்மைப்படுத்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், வார்டுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு மின்மோட்டார்களை பழுது நீக்க வேண்டும், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குப்பை வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கட்சியின் மாநகர் மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.