ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வந்த சுமார் ஒரு டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை பொன்னை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழக-ஆந்திர மாநில எல்லையான பொன்னை பேருந்து நிலையம் அருகே பொன்னை காவல் ஆய்வாளர் இலக்குவன் அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், ஒரு டன் எடையுள்ள 23 செம்மரக் கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கார் மற்றும் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலை (27) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.