இன்றைய இளைய தலைமுறையினர் கல்வெட்டியலை கற்றுத் தேர்ந்து வரலாற்றை மாற்றி எழுதக் கூடிய தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபட்டு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் கேட்டுக் கொண்டார்.
வாலாஜாபேட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம்யிலரங்கம் 15 நாள்கள் நடைபெற்றது. இப்பயிற்சியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி, வேலூர் ஊரீசு கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக் கழக மாணவ, மாணவியர் 40 பேர் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பேசியது:
வரலாற்று பெருமையுடைய தொண்டை நாட்டில் சத்ய புத்ரர்கள், சமணர்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. பூமியை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தோண்டினாலும் பழங்கால கல்வெட்டுகள், சிற்பங்கள் கிடைக்கக் கூடிய பகுதியாக வேலூர் மாவட்டம் உள்ளது.
சிந்துசமவெளி நாகரீகமே பழைமையானது என்ற நிலையை மாற்றக் கூடிய புதிய ஆதாரங்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முந்தைய அல்லது அதற்கு இணையானது நம் நாகரீகம் என்பதை அந்த அகழ்வாராய்ச்சி மூலம் நாம் அறிய முடிகிறது. ஆகவே இன்றைய இளைய தலைமுறையினர் கல்வெட்டியலை கற்றுத் தேர்ந்து தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றை மாற்றக் கூடிய ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் க. இளம்பகவத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.மார்ஸ், தொல்லியல் துறை உதவி இயக்குநர் ர.பூங்குன்றன், உதவி இயக்குநர் க.கலைவாணன், துணை இயக்குநர் இரா.சிவானந்தம், ஆற்காடு தொல்லியல் துறை காப்பாட்சியர் ஜெ.ரஞ்சித், மகளிர் கல்லூரி முதல்வர் க.பரமேஸ்வரி, மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.