விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மகாசபை மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் வழங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 3-ஆவது உலகளாவிய தேசிய ஆசிரியர் மாநாடு அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தில் 3 நாள்கள் நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் டிஜிட்டல் புரட்சிக்கான உயர்கல்வியில் தேவைகள் என்பது பற்றி ஆசிரியர் மாணவர்களுக்கு எத்தகைய கற்பித்தல் முறையை கையாளுவது என்பது பற்றி பேசப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கெளரவிக்கப்பட்டார். அரசியலில் சாதனை, விஐடியில் சர்வதேச தரத்தில் உயர்கல்வி, விஐடியில் ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வித் திட்டமான ஸ்டார்ஸ் திட்டம், வசதியற்ற மாணவர்கள் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் பயில்வதற்கான அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டம் ஆகிய சேவைகளுக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை தேசிய ஆசிரியர் மகாசபை நிறுவனர் மற்றும் எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் விஸ்வநாத் காரத், தேசிய ஆசிரியர் மகாசபை தலைவர் ஆர்.ஏ. மஷேல்கர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.