வரும் தேர்தல்களில் அமமுக முதல் இடத்தைப் பெறும் என்று சோளிங்கர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக வேலூர் கிழக்கு மாவட்டச் செயலருமான என்.ஜி.பார்த்திபன் பேசினார்.
அரக்கோணம், பழனிபேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுக் கட்சிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணையும் விழாவில் அவர் பேசியது:
திருவாரூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அமமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், திமுக தனது வேட்பாளர் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு, தேர்தலை ரத்து செய்யும் வேலையில் ஈடுபட்டது. தற்போது அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டுவிட்டது. இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக 3-ஆவது இடத்துக்கு போவது உறுதி. அமமுக முதல் இடத்தைப் பெறும் என்றார்.
இக்கூட்டத்துக்கு அரக்கோணம் நகரச் செயலர் எஸ்.கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்டப் பொறியாளர் அணிச் செயலர் சாந்தகுமார் வரவேற்றார். இதில், நெமிலி கிழக்கு ஒன்றியச் செயலர் கோ.சி.மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட நிர்வாகிகள் கனியப்பன், யோகானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.