காட்பாடி அருகே விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
வேலூர், சத்துவாச்சாரி அலமேலுமங்காபுரம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியநாதன். இவரது மனைவி மேரிலதா, கணியம்பாடி அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் கரோல் ரோஜர் (18), தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
இவர் புதன்கிழமை காட்பாடி திருவலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கரோல் ரோஜர் வியாழக்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கரோல் ரோஜரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து கரோல் ரோஜரின் நுரையீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து காட்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.