நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்த பூனையைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கிய இளைஞர் கயிறு அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
வேட்டப்பட்டு சாமுண்டீஸ்வரி வட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (20). அவரது வீட்டின் அருகே உள்ள 80 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் பூனை ஒன்று வெள்ளிக்கிழமை காலையில் தவறி விழுந்தது. அப்பூனையைக் காப்பாற்ற கயிறு மூலம் கிணற்றில் இறங்கியபோது கயிறு அறுந்து ராமமூர்த்தி கிணற்றில் விழுந்தார். இதில் காயமடைந்த அவர் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் ஒருமணி நேரம் போராடி ராமமூர்த்தியை உயிருடன் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கிணற்றில் தவறி விழுந்த பூனையையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர்.