ஆம்பூர் அருகே பள்ளி நேரத்தில் வெளியே சென்ற ஆசிரியரிடம் மாவட்டக் கல்வி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார்.
மணியாரகுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. ஓராசிரியர் பள்ளியான இங்கு மொத்தமே 15 மாணவர்கள்தான் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல் 15 மாணவர்களும், ஆசிரியர் சிவக்குமாரும் பள்ளிக்கு வந்தனர். மதியம் ஆசிரியர் சிவக்குமார் திடீரென வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் பள்ளி திரும்பவில்லை.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) லதா அப்பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் விசாரித்தார்.
பின்னர், சிவக்குமாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தேர்தல் பணி தொடர்பாக பேர்ணாம்பட்டு சென்றதாகக் கூறினார்.
ஓராசிரியர் பள்ளியில் யாரிடமும் அனுமதி பெறாமல் பள்ளி ஆசிரியர் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.