நாட்டறம்பள்ளி அருகே காரில் ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கொத்தூர் மற்றும் தகரகுப்பம் வழியாக ஆந்திரத்துக்கு வாகனங்களில் அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் உமாரம்யா மேற்பார்வையில் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் (பொறுப்பு) தலைமையில் வருவாய்த் துறையினர் புதுப்பேட்டை சாலையில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பந்தாரப்பள்ளி இணைப்புச் சாலை அருகே வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அதிகாரிகளைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கி ஓடிவிட்டார். காரை சோதனை செய்ததில் 18 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.