பேர்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் எடுத்துச் சென்ற ரூ. 1.85 லட்சத்தை தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் தொகுதி தேர்தல் நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலர் லோகபிரியன் தலைமையில் அக்குழுவினர் பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டாவுக்குச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதிலிருந்த தக்காளி வியாபாரியான விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமாரிடம் ரூ. 1.85 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தக்காளி வாங்கி வர வி.கோட்டாவுக்கு பணத்துடன் செல்வதாகக் கூறினார்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் அப்பணத்தை பறிமுதல் செய்து உதவித் தேர்தல் அலுவலரும், பேர்ணாம்பட்டு வட்டாட்சியருமான செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.