வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தலின்போது பதிவாகும் வாக்குகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளன.
தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முக சுந்தரம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், சார்-ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் உடனிருந்தனர்.