குடியாத்தம், கே.வி.குப்பத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்யும் மேடை அமைக்கும் இடங்களை வேலூர் சரக டிஐஜி என்.காமினி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை மாலை குடியாத்தம், கே.வி.குப்பத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக குடியாத்தத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலும், கே.வி.குப்பத்தில் பேருந்து நிலையம் அருகிலும் பிரசார மேடைகள் அமைக்கப்பட உள்ளன. பிரசார மேடைகள் அமைய உள்ள இடங்களை டிஐஜி என்.காமினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் வருகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், போக்குவரத்தை மாற்றியமைப்பது குறித்தும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மற்றும் உள்ளூர் போலீஸாருடன் அவர் ஆலோசனை நடத்தினார். மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், குடியாத்தம் டிஎஸ்பி என்.சரவணன், காவல் ஆய்வாளர்கள் எம்.டி.இருதயராஜ், ஆ.செல்லபாண்டியன், அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.