ஆம்பூர் அருகே ஷூ கம்பெனி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு பெண் தொழிலாளர்கள் புதன்கிழமை இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனிக்கு வடசேரி, வடகரை, ஈச்சம்பட்டு, சின்னபள்ளிகுப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை வழக்கம் போல வேனில் வேலைக்குச் சென்றனர்.
மணியாரகுப்பம் பகுதியில் வேனுக்காகக் காத்திருந்த தொழிலாளர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடகரை பகுதியைச் சேர்ந்த சிவகாமி (50), மேல்ஈச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த உஷா (37) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த ஆம்பூர் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்து குறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.