சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை: எஸ்.பி. பிரவேஷ்குமார் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் கட்செவி அஞ்சல், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வரும் எந்தவொரு தகவலையும் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் பொதுமக்கள் உடனுக்குடன் பகிர்வது அதிகரித்து வருகிறது. இதுவே சமூகத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு மூலக்காரணமாகி விடுகிறது.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறியாமல் அதை மற்றவர்களுக்கு பகிரக் கூடாது என்று வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஜாதி, மதம் தொடர்பான தகவல்கள், பிரச்னைகளைத் தூண்டும் வகையிலான செய்திகள், பெண்களைத் தவறாக சித்திரிக்கும் வகையில் வரும் எந்தவொரு ஆடியோ செய்திகளையும் பகிரக் கூடாது. இதுபோன்ற செயல் தனிநபர், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் களங்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.