குடிநீர்ப் பிரச்னை தீர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு இருளர் இனத்து மக்கள் நன்றி தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குள்பட்ட மல்லகுண்டா ஊராட்சியில் இருளர் வட்டத்தில் 35-க்கும் அதிகமான இருளர் இனத்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சில மாதங்களாக ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால், டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இருளர் வட்டத்தில் குடிநீர் பிரச்னை தீர புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலங்கிள்ளி, வசந்தி ஆகியோர் இருளர் வட்டத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்தி கூடுதலாகக் குழாய்களைப் பொருத்தி குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் திட்ட இயக்குநர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.