மேல்விஷாரம் நகராட்சியில் சாலை, கழிவு நீர், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட கையூம் நகர், மார்கபந்து நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்திட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சிப் பகுதியில் உள்ள 3,066 வீடுகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் தவணை முறையில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டப் பணிகள் தொடக்க விழாவுக்கு நகராட்சி ஆணையர் கணேசன் தலைமை வகித்தார். மில்லத் கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஏ.இப்ராஹீம் கலிலுல்லா, முன்னாள் நகராட்சித் தலைவர் பி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தவல்லி செளகார் நிஷார் அஹமது உள்ளிட்டோர் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் நகராட்சி பொறியாளர் பாபு, நகராட்சி அதிகாரிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.