நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஓட்டுப்போடு கெத்து காட்டு என்ற தேர்தல் விழிப்புணர்வு ரத ஊர்வலம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் இந்த விழிப்புணர்வு ரதத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மக்களவைக் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுப் போடு கெத்து காட்டு என்ற தேர்தல் விழிப்புணர்வு ரதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாதிரி வாக்குப்பதிவு மையம், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பது குறித்து மாதிரி விழிப்புணர்வு விடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ரதம் வேலூர் மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு வாக்குப்பதிவின் அவசியம் குறித்தும், நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், மகளிர் திட்ட இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.