வேலூர் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதலே ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 மாதங்களாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரப்பன், மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை பிளாஸ்டிக் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி, வேலூர் மார்க்கெட், சுண்ணாம்புக்காரத் தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அங்கிருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.