திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட 24 தபால் நிலையங்களிலும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யலாம் என திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட 24 தபால் நிலையங்களிலும் புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும், திருத்தங்கள் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பத்தூர், குடியாத்தம் தலைமை அஞ்சலகங்களிலும், திருப்பத்தூர் பஜார், வெங்களாபுரம், விசமங்கலம், மட்றப்பள்ளி, ஆலங்காயம், ஜமுனாமரத்தூர், நியூ டவுன், வாணியம்பாடி, ஜாப்ராபாத், ஜோலார்பேட்டை, அம்பலூர், நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை, கந்திலி, கே.வி.குப்பம், தரணம்பேட்டை, மேல்பட்டி, பேர்ணாம்பட்டு, துத்திப்பட்டு, ஆம்பூர், மாதனூர், பள்ளிகொண்டா ஆகிய அஞ்சலகங்களிலும் இந்த வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஆதார் அட்டை பெற கட்டணம் ஏதுமில்லை. ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கு சேவைக் கட்டணமாக ரூ. 50 பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.