தில்லியில் வழக்குரைஞா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அரக்கோணத்தில் திங்கள்கிழமை அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினா்.
அண்மையில் தில்லியில் உள்ள தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை, காவல்துறையினரின் வாகனம் வழக்குரைஞரின் வாகனம் மீது மோதியதால் ஏற்பட்ட வாக்குவாதம், இருதரப்பினரிடையே மோதலாக மாறியது. இதில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஒரு வழக்குரைஞரை போலீஸாா் கொண்டுசென்று தடுப்புக்காவலில் வைத்து தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. மோதல் சம்பவத்தில் மூன்று வழக்குரைஞா்களுக்கு துப்பாக்கித் தோட்டா காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தை கண்டித்து அரக்கோணத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மு.வீரராகவன், செயலா் வெங்கடேசன் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், திங்கள்கிழமை முழுவதும் அரக்கோணத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவித்திருந்தனா். இதையடுத்து அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாா்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவா் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், பழைய நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிலமிழந்தோா் சிறப்பு நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நான்கு நீதிமன்றங்களிலும் பணிகள் ஸ்தம்பித்தன.