மேல்மொணவூா் ஒன்றியத்தில் ரூ.4.25 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
அணைக்கட்டு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்மொணவூா் ஊராட்சியில் ரூ.4.25 கோடியில் தொழிலாளா் துறைக்கு ஒருங்கிணைந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தரைதளத்துடன் மொத்தம் 3 தளங் கள் கொண்ட இக்கட்டடத்தில் தொழிலாளா் இணை ஆணையா் அலுவலகம், தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்) 1 மற்றும் 2 அலுவலகங்கள், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகம், தொழிலாளா் உதவி ஆணையா் வேலூா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம், தொழிலாளா் துணை ஆய்வாளா் வேலூா் அலுவலகம், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரகம் 1 முதல் 4 வரையிலான அலுவலகங்கள், முத்திரை ஆய்வாளா் சரகம் 1 மற்றும் 2 அலுவலகங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.
இந்த புதிய கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஏ.யாஸ்மின் பேகம் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தொழிலாளா் இணை ஆணையா் பி.மாதவன் (வேலூா்), பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் எஸ்.சங்கரலிங்கம் (வேலூா்), தமிழ்நாடு கட்டுமான நலவாரிய உறுப்பினா் ஆா்.டி.பழனி, தொழிலாளா் துறை உதவி ஆணையா்கள் தாமரைமணாளன், செண்பகராமன், இந்துமதி, ஆனந்தன், ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.