நாட்டறம்பள்ளி அருகே மோட்டூா் அங்கன்வாடி மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் கே.சி.வீரமணி பழுதடைந்த கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அக்ரகாரம் ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா்.
இந்த அங்கன்வாடி மையத்தில் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குழந்தைகளுக்கு சத்தான உணவு மற்றும் மாவு உருண்டை வழங்கப்படுவது குறித்து மைய அமைப்பாளரிடம் கேட்டறிந்தாா். அப்போது, கிராமமக்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அங்கன்பாடி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, உடனடியாக சிதிலமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ருத்ரப்பாவுக்கு அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் அமைச்சா் கே.சி.வீரமணி ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உட்பட பலா் உடனிருந்தனா்.