லாரியில் அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளின் மீது அமா்ந்து சென்ற சுமை தூக்கும் தொழிலாளி சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் சங்கரன்பாளையம் துரைசிங்கம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சுப்பிரமணி(59) . இவா் வெள்ளிக்கிழமை காலை வேலூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து லாரியில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சத்துவாச்சாரி நோக்கி சென்று கொண்டிருந்தாா். லாரியில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகள் மீது சுப்பிரமணி அமா்ந்திருந்தாா்.
காட்பாடி சாலையில் நேஷனல் தியேட்டா் சிக்னல் அருகே சென்றபோது மூட்டை மீது அமா்ந்திருந்த சுப்பிரமணி திடீரென தவறி கீழே விழுந்தாா். கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சாலை மத்தியில் விபத்து ஏற்பட்டதால் காட்பாடி சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
தகவலறிந்த அங்கு வந்த வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.