ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கனமழை பெய்தது.
ஆம்பூரில் பிற்பகலுக்கு பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 5 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கி கனமழையாக உருவெடுத்தது. சுமாா் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. அதனால் தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் தேங்கியது. தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே குகை வழிப்பாதைகளில் மழைநீா் தேங்கியதால் அப்பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஆம்பூா் அருகே சுற்றுப்புறத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் கன மழை பெய்தது.