ஆரணி நகர காவல் நிலையம் முன் கார் ஓட்டுநர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
ஆரணி பெரிய கடை வீதி அருகேயுள்ள வராகமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (32). வாடகைக் கார் ஓட்டுநர். இவருக்கு மனைவி விமலா, மகன் ரித்திக்ராஜ் (7), மகள் ஸ்ரீமித்ரா (3) ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் கடந்த 5-ஆம் தேதி இரவு மது போதையில் தனது பைக்கை பெரிய கடை வீதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, ரோந்துப் பணியில் இருந்த நகர போலீஸார் பைக்கை மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். மறுநாள் பைக் காவல் நிலையத்தில் இருப்பது குறித்து அறிந்த கோபாலகிருஷ்ணன் அங்கு சென்று போலீஸாரிடம் பைக்கை கேட்டார்.
அதற்கு போலீஸார் வண்டியின் ஆவணப் புத்தகம், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்து வருமாறு கூறினர். வண்டி ஆவணப் புத்தகம் இல்லாததால், கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து இரு நாள்களாக சென்று வண்டியை கேட்டதாகத் தெரிகிறது. இதற்கு போலீஸார் மறுத்துவிட்டனராம்.
இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை மது போதையில் பெட்ரோல் கேனுடன் காவல் நிலையம் சென்று, பைக்கை தராவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்து, பெட்ரோலை தன் மீது ஊற்றிக் கொண்டார்.
அப்போது, சுற்றியிருந்த போலீஸார் அவரைப் பிடித்து கைது செய்தனர்.