வேலூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் மருத்துவ ஆய்வகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஆய்வக இயந்திரங்கள் கருகி சேதமடைந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். வேலூர் சார்பனாமேடு பகுதியில் உள்ள 4 அடுக்குமாடியில் தனியார் மருத்துவ ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதன்கிழமை காலை 10 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். எனினும், ஆய்வகத்தில் இருந்த இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தொடர்ந்து வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
ஆய்வகத்தில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக பேட்டரிகள் வைத்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக தீயணைப்புத் துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை. உடனடியாக அனுமதி பெற ஆய்வக நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நிறுவனம், வணிக வளாகங்களில் இயங்கினாலும் அதற்கு தீயணைப்புத் துறை சார்பில் தடையில்லாச் சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.