உடல்நலக்குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனுக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர், கடந்த 10-ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் வந்தார்.
அவர், பி.ஹெச்.பாண்டியனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், பி.ஹெச்.பாண்டியனின் மகள் தேவமணி, அவரது கணவரும், சிஎம்சி மருத்துவருமான தீபக்செல்வராஜ் ஆகியோரையும் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் முகமதுஜான், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.ரவி (அரக்கோணம்) , சம்பத் (சோளிங்கர்), முன்னாள் அமைச்சர் விஜய், மாவட்ட அதிமுக பொருளாளர் எம்.மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.