ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக பொன்னை ஆற்றில் ஓடிய மழை வெள்ளத்தால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் வியாழக்கிழமை மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே போல் காட்பாடி வட்டம், ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ள பொன்னை சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் தமிழக எல்லைக்குள்
கடந்த 4 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நீவா நதி என்னும் பொன்னை ஆற்றில் பெருக்கெடுத்து பாய்ந்தோடி செவ்வாய்க்கிழமை மாலை வந்தடைந்தது. தொடர்ந்து, தமிழக எல்லையான பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் பொன்னை ஆற்றில் கட்டுப்பட்டுள்ள தரைமட்ட தடுப்பணையை கடந்து, பொன்னை ஆற்றின் குறுக்கே மேல்பாடி அருகே 1855- ஆம் ஆண்டில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு வெள்ளநீர் வந்து சேர்ந்தது.
ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தமிழக எல்லையை வந்தடைந்த மழை வெள்ள நீரால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் வெள்ளநீரை மலர்த் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும், இளைஞர்கள் தரைமட்ட தடுப்பணை நிரம்பி வழிந்து சென்றதால், அந்த நீரில் நின்று சுயபடம் (செல்ஃபி) எடுத்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.