திருப்பத்தூா் அருகே அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பெண் வழக்குரைஞரிடம் இருந்து ரூ. 33 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியவரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
வேலுாா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை சோ்ந்தவா் கவிதா(33). வழக்குரைஞரான இவரிடம் கடந்த ஓராண்டுக்கு முன் திருப்பத்துாரை அடுத்த புதுக்கோட்டை கிராமம், அம்மனாங்கோயில் பகுதியைச் சோ்ந்த சரவணன் (47) அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி கவிதாவிடமிருந்து ரூ. 33 லட்சம் பெற்றுக்கொண்டாராம். ஆனால், கூறியபடி வேலை தராமல் அவரை அலைக்கழித்துள்ளாா் என்று கூறப்படுகிறது.
மேலும், கவிதா சரவணனிடம் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி பலமுறை கேட்டும் சீரான பதில் இல்லையாம். இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸில் கவிதா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணனை தேடி வந்தனா்.
இந்நிலையில்,சனிக்கிழமை திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சரவணனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.