திருப்பத்தூர் உழவர் சந்தையில் நீண்ட நாள்களாக கழிவுகள் அகற்றப்படாதது குறித்து தினமணியில் செய்தி வெளியானதன் எதிரொலியாக குப்பைகள் அகற்றப்பட்டன.
திருப்பத்தூர் உழவர் சந்தையில் அழுகிப்போன காய், கனிகளை மூட்டை கட்டி இருப்பு வைத்திருந்தனர்.அதனை நகராட்சியினர் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்துத் தரும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.
பிரிக்கப்படாமல் பல நாள்களாக கட்டப்பட்டிருந்த மூட்டைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து, தினமணியில் சனிக்கிழமை புகைப்படங்களுடன் விரிவான செய்தி வெளியானது.
அதையடுத்து, திருப்பத்தூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளர்கள் உழவர் சந்தைக்கு சென்று கட்டப்பட்டிருந்த குப்பை மூட்டைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதுகுறித்து சுகாதார அலுவலர் ராஜரத்தினம் கூறுகையில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைக் கொட்ட சந்தை வளாகத்தில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.