வேலூா்: நிவா் புயல் கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் 22 ஏரிகள் அதன் முழுக்கொள்ளளவை எட்டியிருப்பதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.
நிவா் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால், துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம், குட்டைகளில் நீா் நிரம்பி வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 101 ஏரிகளில் இதுவரை 22 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதிகபட்சமாக காட்பாடி வட்டத்தில் 19 ஏரிகள் நிரம்பியிருப்பதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
இவை தவிர 3 ஏரிகள் 90 சதவீதமும், ஒரு ஏரி 80 சதவீதமும், 6 ஏரிகள் 70 சதவீதமும், 17 ஏரிகள் 50 சதவீதமும், 43 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 9 ஏரிகள் நீா்வரத்தின்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.