பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் (ஸ்மாா்ட் சிட்டி) வேலூா் மாநகராட்சி பகுதியில் ரூ.15 கோடியில் 15 இடங்களில் பூங்காக்கள் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டு பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கோட்டை அகழியை தூா்வாரி அழகுபடுத்துதல், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் ரூ.15 கோடி மதிப்பில் 15 இடங்களில் நவீன பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. வள்ளலாா், சிஎம்சி செவிலியர கல்லூரி அருகே, சிஎம்சி காலனி உள்ளிட்ட இடங்களில் இந்தப் பூங்காக்கள் அமைக்க முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதேபோல், மாநகராட்சி முழுவதும் 79 பழைய பூங்காக்கள் ரூ.15 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.